வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் 
செய்திகள்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

ராமநாதபுரம், சேத்தி, கே.பிரிட்ஜ், அகரம் (பெரம்பலூர்) தலா 9 செ.மீ., தரங்கம்பாடி, அனைக்கார சத்திரம், ராமேஸ்வரம், சீர்காழி, தீர்த்தானந்தம், வட்டமை, சிதம்பரம், தலா 8 செ.மீ., கோத்தகிரி, காட்டுமன்னார்கோவில், பரங்கிபேட்டை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தொண்டி தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

குமரி கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசும் அங்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

தென்மேற்கு பருவமழை இந்த காலகட்டத்தில் 36 செ.மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் 42 செ.மீட்டர் பெய்திருக்கிறது. இது 13 சதவீதம் அதிகம்.

SCROLL FOR NEXT