செய்திகள்

தமிழகத்தில் 7-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும்- இந்திய வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 7-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #Northeastmonsoon

தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி வடக்கிழக்கு பருவமழை தொடங்கியது.

அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கணிசமான அளவுக்கு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் 7-ந்தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. எனவே இந்த சீசனில் தமிழ்நாட்டில் ஓரளவு மழை பெய்யும்.

வங்க கடலில் இலங்கை அருகே உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்யும். எனவே இந்த கால கட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்யும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT