கொரோனா வைரஸ் பரிசோதனை 
செய்திகள்

கேரளாவில் அவசர நிலை பிறப்பிக்க மருத்துவ சங்கம் வேண்டுகோள் : முதல்-மந்திரிக்கு கடிதம்

கேரளாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி இருப்பதாகவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் இந்திய மருத்துவ சங்கம் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. அங்கு கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி இருப்பதாகவும், எனவே கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் மாநில அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள மாநில கிளை தலைவர் டாக்டர் ஆபிரகாம் வர்க்கீஸ், செயலாளர் டாக்டர் பி.கோபகுமார் ஆகியோர் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறுகையில், ‘கேரளாவில் கடந்த 28 நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இப்படியே போனால் வருகிற நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விடும். தற்போதே மாநில மருத்துவமனைகள் நோயாளிகளால் ஏறக்குறைய நிரம்பி விட்டன’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் நிலையை எட்டியிருப்பதாக கூறியிருக்கும் அவர்கள், எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த மருத்துவ அவசர நிலையை பிறப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.