செய்திகள்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்: இல.கணேசன்

தமிழகத்தில் உடனடியாக நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கூறினார்.

மதுரை:

மதுரையில் பள்ளி ஆசிரியர்களுக்கான “ஆசிரியர் சங்கமம்” என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் இன்று நடந்தது. இதில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி துறையில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டு வந்தவர் வாஜ்பாய். நவோதயா பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசு அதை தொடங்காமல் உள்ளது.

உடனடியாக நவோதயா பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வருவதுதான் நல்லது. அடிக்கடி தேர்தல் வருவது நல்லதல்ல.

தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சி இரண்டாக பிரிந்து விட்டது என்பதற்காக அனைத்து வாக்குகளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குதான் கிடைக்கும் என்ற கணிப்பை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு பொய்யாக்கி விட்டது.

தேர்தல் ஆணையம் மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஆனால் முதன் முதலில் இடைத்தேர்தலில் தி.மு.க.தான் திருமங்கலம் பார்முலாவை அறிமுகப்படுத்தியது என்பதை மறக்க முடியுமா?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதால் அவர் தீர்க்கத்தரிசியாகி விடமுடியாது. ஆட்சி கலையும் என்று இவர் சொன்னால் நடந்து விடுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT