செய்திகள்

ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கேரள மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு  தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதேபோல், சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தினர். இதில், சுமார் 80-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆய்வு மாணவரான சூரஜ் மீது இன்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹால்டல் கேண்டீனில் மதிய உணவு வேளையின் போது சுமார் 7 மாணவர்கள் சேர்ந்து சூரஜ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் சூரஜின் வலது கண் கடுமையாக காயம் அடைந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து பல்கலைக் கழக டீன் இடம் நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.