சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் வலுவடைந்தது. தீர்ப்பை சுட்டிக்காட்டி சபரிமலைக்கு வந்த பெண்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் கோவிலுக்குள் எப்படியும் நுழைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்று புறப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவிதா உள்ளிட்ட இரண்டு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் இன்று சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரலாம், ஆனால் பெண்ணியவாதிக்கு பாதுகாப்பு தர முடியாது என அரசு தெரிவித்துள்ளது.