செய்திகள்

விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும் - டெல்லி போராட்டத்தில் ராகுல் பேச்சு

தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். #farmersloans #RahulGandhi #Delhifarmerprotest

மாலை மலர்

டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் வழியில் தடுத்து நிறுத்தினர். எனினும், பாராளுமன்றத்துக்கு சற்று தூரத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இங்குவந்து உரையாற்றிக் கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ‘ராம் ராம்’ என்று உச்சரித்தபடி ராமர் கோவில் என்ற ஒரே ஆயுதத்தை மோடியும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவையும் உயர்த்திப் பிடிக்க தொடங்கியுள்ளதாகவும்,  விவசாயிகளைப்பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவோம். விவசாயிகளுக்கான போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், வெற்று வாக்குறுதிகளை தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை. இப்போது விவசாயிகளின் நிலைமையை பாருங்கள்.

விவசாயிகளின் நல்ல எதிர்காலத்துக்காக நாங்கள் எல்லாம் அவர்களுடன் துணையாக இருப்போம். விவசாயிகளையும், இளைஞர்களையும் மத்திய அரசு வஞ்சித்தால் இந்த ஆட்சியை அவர்கள் தூக்கி எறிவார்கள்.

கடன் தள்ளுபடியை அரசிடம் இருந்து விவசாயிகள் பரிசாக எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குண்டான உரிமைக்காகதான் அவர்கள் போராடி வருகின்றனர்.