செய்திகள்

தொழிலதிபர் ரன்வீர் ஷா - நண்பர் கிரண் ராவுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன்

சிலைக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் ரன்வீர் ஷா, அவரது நண்பர் கிரண் ராவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. #IdolTheftCase #IdolWing #RanvirShah

மாலை மலர்

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக  ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகள் முறையாக வாங்கப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகும்படி ரன்வீர் ஷாவுக்கு சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடாமல் தடுக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி ரன்வீர் ஷாவுக்கு சிலைக் கடத்தல்  தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

இதற்கிடையே தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் நண்பரான கிரண் ராவ் வீட்டு வளாகத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த  சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.