சென்னை உயர்நீதிமன்றம் 
செய்திகள்

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான போலீஸ் அதிகாரி புகாரின் மீது என்ன நடவடிக்கை?- ஐகோர்ட்டு கேள்வி

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான போலீஸ் அதிகாரி புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து வருகிற 24-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு காதர் பாஷா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

அதில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கில் எனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஐகோர்ட்டையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் புகார் மனு அளித்தேன். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.