புதுடெல்லி:
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.
இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றத்தை குல்புஷன் ஒப்புக் கொண்டது போன்ற வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்நிலையில் குல்புஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த கடிதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குல்புஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து இருப்பது குறித்து குல்புஷனின் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். முன்னதாக ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளில் இருந்து சில கைதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதாக இருந்ததை தொடர்ந்து அதை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.
‘ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கும், அவருக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும், ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, ஆதாரமற்றவை, பாகிஸ்தானால் தவறாக சித்தரிக்கப்பட்டவை’ என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குல்புஷன் ஜாதவின் மரண தண்டனை தொடர்பாக இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை மே மாதம் 15-ந்தேதி துவங்கும் என தெரிவி்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜாதவ் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.