செய்திகள்

ஐ.சி.எப். திருமண மண்டபத்தில் சொகுசு கார் மோதி தொழிலாளி பலி

ஐ.சி.எப். திருமண மண்டபத்தில் சொகுசு கார் மோதி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வில்லிவாக்கம்:

ஐ.சி.எப். கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 60). கூலி தொழிலாளி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வேலை பார்த்தார்.

பின்னர் வேலை முடிந்து கார்கள் நிறுத்தும் இடத்தில் படுத்து தூங்கினார்.

இந்த திருமணத்தில் கோயம்பேட்டில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீதர் கலந்து கொண்டார்.

இரவு 11 மணிக்கு கார் நிறுத்தும் இடத்தில் இருந்த தனது சொகுசு காரை எடுத்து வெளியில் விடும்படி திருமண மண்டப ஊழியர் ஆனந்தனிடம் கார் சாவியை கொடுத்தார். அவர் காரை வெளியே கொண்டு வருவதற்காக பின்னோக்கி எடுத்தார்.

அப்போது அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி ரவி மீது கார் ஏறி நசுக்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் அதிபர் ஸ்ரீதர், ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.