செய்திகள்

இந்தியாவுக்காக என்ன செய்யமுடியுமோ அதை செய்வேன்: ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே

இந்தியாவின் வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அகமதாபாத்:

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்திற்கான தொடக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகிய இருவரும் புல்லட் ரெயில் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.

இதனையடுத்து, விழா மேடையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சிறப்புறை ஆற்றினார். தனது பேச்சை ‘நமஸ்தே’ என்று கூறி தொடங்கிய ஜப்பான் பிரதமர் பேசியதாவது:-

எனது நண்பர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த தீர்வாக அவர் ஜப்பானின் உதவியை தேர்ந்தெடுத்துள்ளார். நாங்கள் எங்களது முழுமையான ஒத்துழைப்பை தருவோம்.

மேக் இன் இந்தியா திட்டத்திற்காக ஜப்பான் தனது பங்களிப்பை வழங்க உள்ளது. அடுத்த முறை நான் இங்கே வரும் போது புல்லட் ரெயிலில் பிரதமர் மோடியுடன் வரவேண்டும் என்பது எனது விருப்பம். இந்தியா நிச்சயமாக என்னை கவர்ந்திருக்கிறது. இந்தியாவுக்கான என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். இந்தியா - ஜப்பான் உறவானது உலகளவில் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

இவ்வாறு அபே பேசினார்.