கண்ணன் கோபிநாத் 
செய்திகள்

மக்களுக்கான பணியில் சுதந்திரம் இல்லை.. -ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி

தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்ததற்கான காரணங்களை கூறியுள்ளார்.

மாலை மலர்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.  இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் கண்ணன் கோபிநாத்.

இவர் தங்கள் யூனியன் பிரதேசம் சார்பாக கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி கேரளா வந்தார். பணத்தை ஒப்படைத்த பின்னர் கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றார்.

அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 10 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.  அதைத்தொடர்ந்து, தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச் சென்றார்.

குரல் இருந்தும் கொடுக்க முடியாதவர்களுக்கு, குரலாக செயல்படவே இப்பணியில் சேர்ந்தேன். ஆனால், என் சொந்த குரலையே இழந்துவிட்டேன். மக்களுக்காக நான் சுதந்திரமாக பணியில் ஈடுபட முடிவதில்லை. இதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன்.

இதுபோன்ற அமைப்பில் இருந்துக் கொண்டே இந்த அமைப்பை மாற்ற நான் கடும் முயற்சி செய்துவிட்டேன். ஆனால், இந்த அமைப்பு சரியாகும் எனும் நம்பிக்கை இல்லை. தற்போது அரசு ஓய்வு இல்லத்தில் வசிக்கிறேன். அடுத்து எங்கு போக வேண்டும் என தெரியவில்லை. மனைவி வேலை பார்க்கிறார். அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.