செய்திகள்

எந்த வழக்கையும் சந்திக்க தயார்: நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சவால்

என் மீது வழக்கு தொடரப்படும் என முதல்வர் கூறியது குறித்து எந்த கவலையும் இல்லை. நான் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

புதுவை அரசையும், அமைச்சர்களையும் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பும் கவர்னர் கிரண்பேடி மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவது தொடர்பாக டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த கவர்னர் கிரண்பேடி நேற்று புதுவை திரும்பினார்.

தனியார் அமைப்பு சார்பில் ஏழை பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் நிகழ்ச்சியின் வழியனுப்பு விழா ராஜ் நிவாசில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையின் முன்னேற்றத்திற்கு எந்த ஆலோசனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். இந்த ஆளுநர் மாளிகை மக்களுக்கான மாளிகை இது மக்களுக்கு மட்டுமின்றி முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் திறந்தே உள்ளது. அவர்களது கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படும்.

என்மீது வழக்கு தொடரப்படும் என முதல்வர் கூறியது குறித்து எந்த கவலையும் இல்லை. நான் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.