செய்திகள்

குடும்ப தகராறில் பெண் போலீசை குத்தி கொல்ல முயன்ற கணவன்

ஆண்டிப்பட்டி அருகே குடும்பதகராறில் பெண் போலீசை குத்தி கொல்ல முயன்ற கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் அறிவுஹேமா(31). இவர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வருசநாடு அருகில் உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

முருகன் திபத் எல்லைபாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஹேமா தன்னுடன் பணிபுரியும் போலீஸ் ஏட்டான பெருமாயி என்பவருடன் கோவில் பாதுகாப்பு பணிக்கு சென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த முருகன் தனது மனைவி ஹேமாவை தாக்கினார்.

அவர் பயந்து அருகில் இருந்த ஒரு டெய்லர் கடைக்குள் புகுந்தார். இருந்தபோதும் முருகன் விரட்டிவந்து கடையில் இருந்த கத்தரிக்கோலால் ஹேமாவை குத்தி கொலை செய்ய முயன்றார். படுகாயமடைந்த அவர் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.