கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மலையாள புழாவை சேர்ந்தவர் ஹரி (வயது 55). இவரது மனைவி லதா (51). கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்தது.
இந்நிலையில் இவரது கிணற்றில் தண்ணீர் எடுக்க நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வந்தார். வழக்கமாக கிணற்றின் உருளையில் இருக்கும் கயிறு இல்லை. இதனையடுத்து அவர் அங்குள்ள அறைக்கு சென்று கயிறை தேடினார். அங்கு ஹரி அந்த கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தார். பொதுமக்கள் பத்தினம்திட்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவரின் மனைவியை தேடியபோது அவர் அங்கு இல்லை. ஹரியின் வீடு பூட்டப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு லதா இரும்பு கம்பியால் அடிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இருவரது உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது மனைவியை அடித்துக்கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது என்று கூறினர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.