செய்திகள்

திலாஸ்பேட்டையில் கணவரின் குடிபழக்கத்தால் இளம்பெண் தற்கொலை

திலாஸ்பேட்டையில் கணவரின் குடிபழக்கத்தால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதற்கிடையே ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அது போல் நேற்று மாலை ரவி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வழக்கம் போல் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரவி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ரவி வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ரவி ஜன்னல் வழியாக பார்த்த போது மின் விசிறியில் சேலையால் வள்ளி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து வள்ளியை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.