செய்திகள்

கணவரின் குடிப்பழக்கத்தால் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை

கணவரின் குடிப்பழக்கத்தால் மனம் உடைந்த கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் திலகர் 1-ம்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி என்கிற முத்துலட்சுமி (வயது22). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. லட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூலி வேலைக்கு சென்றுவிட்டு தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவாராம். இதனால் லட்சுமி கணவரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை நிறுத்தமுடியவில்லை.

இந்நிலையில் சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி இன்று காலை இறந்தார்.

இது குறித்து அவரது தாயார் குஞ்சம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.