போலீசார் விசாரணை 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே மனைவியை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற கணவர்- போலீசார் விசாரணை

ஒரத்தநாடு அருகே மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கணவர் கொலை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை. அவரது மகன் இளையராஜா (வயது 35).

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சங்கீதா (30) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டிலேயே தையல் தொழில் செய்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் இளையராஜா அடிக்கடி வெளிநாடு சென்று வருவாராம். வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யாமல் திரும்பி வருவதும் பணத்தை வீணாக்குவதுமாக இருந்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக இளையராஜா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து அங்கேயே தங்கி வந்துள்ளார். தனது மனைவி சங்கீதா நடத்தையில் சந்தேகப்பட்ட இளையராஜா அடிக்கடி போனில் சங்கீதாவை பேசி திட்டி தகராறு செய்துள்ளார். நேற்று காலை சென்னையில் இருந்து ஆம்பலாப்பட்டு வந்த இளையராஜா சங்கீதாவிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த தகராறு அடி தடியாக மாறியது. இதில் இளையராஜா, கத்தரிக்கோலை எடுத்து சங்கீதாவின் வயிற்றில் இளையராஜா குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த சங்கீதாவை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று இரவு இறந்தார்.

இந்த சம்பவம் அறிந்த பாப்பாநாடு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகிறார்கள். மனைவியை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.