ராமேசுவரம்:
ராமேசுவரம், தனுஷ் கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது.
சூறாவளி காற்றினால் எழுந்த மண் படலம், ராமேசுவரம் -தனுஷ்கோடி சாலையை பல இடங்களில் மூடியது.
காற்றின் வேகத்தால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின. இதன் காரணமாக நேற்று பாம்பன் ரெயில் பால சிக்னல்கள் சரியாக இயங்காததால் பல ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
அதன் பிறகு சற்று நிலைமை சீரானதும் மிதமான வேகத்தில், பாம்பன் பாலம் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பாம்பன், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்தன.
இதன் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் பலர் எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதளத்தின் அருகே நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தனர்.