தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் முதல் தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் கோவிந்தாபுரம், தாசர்பட்டி, சத்திரம், கெலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது பலத்த காற்றும் வீசியதால் கோவிந்தாபுரம் பகுதியில் 8 மின் கம்பங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதேபோல் இந்த மழைக்கு பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.