வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியதில் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 3 நாளில் மட்டும் 125 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும் பல்வேறு இடங்களில் மீட்பு பணியை தொடங்க முடியாத அளவுக்கு இன்னும் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக டெக்சாஸ் கடலோர பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் உண்ண உணவின்றியும், குடிக்க தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.
நிவாரண முகாம்களில் 32 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 36 மில்லியன் டாலரை நிவாரணமாக வழங்கப் போவதாக டெல் நிறுவனத்தின் சி.இ.ஒ. மிச்சேல் டெல் மற்றும் அவரது மனைவி சூசன் அறிவித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே 17 மில்லியன் டாலரை நிவாரணமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பல நிறுவனங்களும் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.