செய்திகள்

நஜீப் ரசாக் இல்லத்தில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Malaysia #NajibRazak

கோலாலம்பூர்:

பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மாடர்ன் கைப்பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அப்பகுதி தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பேசிய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவல் உயர் அதிகாரி அமர் சிங், கைப்பற்றபட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது எனவும், மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Malaysia #NajibRazak 

SCROLL FOR NEXT