உலக ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்டியில் மகுடம் சூடியவருமான மணிப்பூரைச் சேர்ந்த பிரதிப்குமார் சிங் பற்றிய சுயசரிதை புத்தகம் வெளியாகி உள்ளது. அந்த புத்தகத்தில் பிரதிப்குமார், ‘நான் எச்.ஐ.வி. நோயால் (எய்ட்ஸ்) பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததற்கு காரணம், எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான்.
2000-ம் ஆண்டு மார்ச் முதல் 2002-ம் ஆண்டு வரை எனது வாழ்க்கையில் கடினமான காலக்கட்டமாகும். ஆனாலும் மனம் தளரவில்லை. டாக்டர்களின் அறிவுரையையும் மீறி கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்று சாதித்து காட்டினேன்’ என்று கூறியுள்ளார். இவர், இளம் வயதில் போதை பழக்கத்துக்கும் அடிமையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 45 வயதான பிரதிப்குமார் தற்போது மணிப்பூர் அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையில் உடற்தகுதி நிபுணராக பணியாற்றி வருகிறார்.