நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று பாளை மகாராஜ நகரில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வீடுகளில் செடிகளுக்கு சிமெண்டு லைன் கட்டி தண்ணீர் வரும் பகுதியில் டெங்கு கொசுப்புழு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
அவருடன் மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயண நாயர், பாளை மண்டல உதவி ஆணையர் வசந்தராஜன், பாளை தாசில்தார் தங்கராஜ், மாநகராட்சி சுகாதார அதிகாரி பொற்செல்வன் மற்றும் அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்தனர்.
அந்த பகுதியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் ஏராளமான காலி பாட்டில்களை குவித்து வைத்திருந்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். பாளை மகாராஜநகர் உழவர் சந்தை அருகே உள்ள மதுரம் ஓட்டலுக்கு சென்று கலெக்டர் சந்தீப் நந்தூரி சோதனை செய்தார்.
அப்போது சமையல் அறையில் உள்ள தண்ணீரில் டெங்கு புழு இருப்பதை கண்டறிந்து, உடனடியாக அந்த ஓட்டலுக்கு கலெக்டர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அவர் அந்த ஓட்டல் உரிமம் முறைப்படி உள்ளதா? என்று ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உழவர் சந்தை அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் ஒதுக்குப் புறத்தில் பழைய டயர்கள், பொருட்களை குவித்து வைத்து இருந்தன. அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மகாராஜநகர் 23-வது குறுக்கு தெரு உள்பட பல்வேறு பகுதிகளிலும் இன்று கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.