செய்திகள்

தெலுங்கானா: கூடுதலாக கேட்ட உப்புக்கு பில் போட்டு வாடிக்கையாளரை அதிரவைத்த ஓட்டல்

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், வாடிக்கையாளர் கூடுதலாக கேட்ட உப்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், வாடிக்கையாளர் கூடுதலாக கேட்ட உப்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சோமாஜிகுடா என்ற இடத்தில் ராஜ்பவன் சாலையில் ஓட்டல் உள்ளது. அவினாஷ் சேதி என்பவர் தன் குடும்பத்தினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றார்.

உணவுக்கு முன் எலுமிச்சை கலந்த சோடாவுக்கு ஆர்டர் கொடுத்தார். ஆனால், அதில் உப்பு சற்று குறைவாக இருந்தது. இதனால் அவர் சிறிது உப்பு சேர்க்கும்படி கேட்டுள்ளார். அதன்பின் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். உணவுக்கான பில்லை பார்த்து அவினாஷ் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த பில்லில் கூடுதலாக சேர்க்கப்பட்ட  உப்புவுக்கும் ஒரு ரூபாய் கட்டணம் என போடப்பட்டு இருந்தது. இதுதொடர்பான

பில்லின் படங்கள் உள்ளூர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘இது தவறாக நடந்துவிட்டது. எங்கள் ஒட்டலில் புதிய சாப்ட்வேரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். அதை ஊழியர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஏற்பட்ட தவறால் உப்புக்கான கட்டணம் சேர்ந்துள்ளது. அவர் பில்லுக்கு பணம் கட்டும் போது, இரவு 11 மணியாகி விட்டது. ஊழியர்கள் பணியை முடிக்கும் அவசரத்தில் இருந்ததால், பில்லை கவனிக்கவில்லை' என்றனர்.

இதைதொடர்ந்து, அவினாஷ் சாப்பிட்ட உணவுக்கான பில் 150 ரூபாயை ஓட்டல் நிர்வாகம் திருப்பித்தர முன்வந்தது. ஆனால், அவினாஷ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.