செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவி பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 6-ம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பென்னாகரம்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 6-ம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுடைய மகள் பூஜா (வயது 11). கூத்தப்பாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பூஜா 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முனுசாமி தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சென்றார். அங்குள்ள அருவி, முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.

பின்னர் ஊத்துமலை பரிசல்துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். பூஜாவும் ஆற்றில் இறங்கி குளித்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக பூஜா தண்ணீரில் மூழ்கினாள். இதை அறிந்த முனுசாமி பதறி துடித்தார். மகளை காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அதற்குள் பூஜா ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாள். இதுபற்றி ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், பரிசல் ஓட்டிகளும் அங்கு வந்து ஆற்றில் பூஜாவை தேடினர். சிறிது தூரத்தில் பூஜா உடலை கண்டு எடுத்தனர். காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி அவள் பலியானது தெரியவந்தது. உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews