செய்திகள்

2 வயது குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு- 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவு

2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக 1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு, சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். #CoimbatoreGovtHospital

கோவை:

திருச்சி மணப்பாறையை சேர்ந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களது 2 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தைக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் குழந்தையை மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் மறுத்துள்ளார்.

சிறுமிக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம், அப்போது தவறு நடந்திருக்கலாம் என அவர் கூறினார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து 1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை நிலைய அதிகாரிகள், நர்சுகள் உள்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CoimbatoreGovtHospital