செய்திகள்

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. #HIVBlood #PregnantWoman

மாலை மலர்

மதுரை:

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார். அப்போது அவர், சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில், சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுக பிரசவம் ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். #HIVBlood #PregnantWoman