கிருஷ்ணகிரி:
பெருந்துறையில் இயங்கி வரும் இந்து அதிரடிப்படை அமைப்பின் மாநில தலைவர் தமிழ்செல்வன், நிறுவனத்தலைவர் ராஜகுரு ஆகியோர் தலைமையில், உறுப்பினர்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். இதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் இந்து சமுதாய பணி மேற்கொண்டு வருகிறது. நாங்கள் வணங்குகின்ற பசு இனத்தை அழிக்கும் வகையில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக மிகவும் சித்ரவதைகள் செய்யப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களை செய்து அடைத்து வைக்கப்பட்ட கன்டெய்னர் லாரியில் அதிக அளவிலான பசு உள்ளிட்ட கால்நடைகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
பசு இனத்தை அழிக்கும் வகையில் சிலர் மூச்சுகூட விடமுடியாத வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு தினசரி செல்கின்றனர். இது குறித்து போலீசார் அவ்வப்போது வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆனால் சிலர் திட்டமிட்டு வாகனங்களில், பசு உள்ளிட்ட கால்நடைகளை அதிக அளவில் ஏற்றிச் செல்கின்றனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.