சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் கங்க்ரா மாவட்டம் நுர்புர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து இன்று மாலை 60 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான சாலையில் செல்லும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான பேருந்தை கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 9 மாணவர்கள் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
பலியானவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #TamilNews