செய்திகள்

ரஞ்சி கோப்பை - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இமாசல் அணி 340/5

தர்மசாலாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில் இமாசலப்பிரதேசம் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி 6 ஆட்டத்தில் 1 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அணி தனது 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேச அணியுடன் மோதியது. டாசில் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியில் அபராஜித் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார். அவருக்கு  ஒத்துழைப்பு கொடுத்த தன்வர் 44 ரன்னில் அவுட்டானார். இறுதியில், தமிழ்நாடு அணி 78.4 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இமாசலப்பிரதேசம் சார்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டும், கலேரியா, ராகவ் தவான், சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, இமாசல் அணி களமிறங்கியது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ராகவ் தவான் 71 ரன்னில் வெளியேறினார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நிகில் காங்டா 44 ரன்களில் அவுட்டானார்.

அதன்பின் இறங்கிய அங்கிட் கால்சி, ரிஷி தவான் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இமாசலப்பிரதேசம் அணி 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. அங்கிட் கால்சி 99 ரன்னிலும், ரிஷி தவான் 71 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தமிழ்நாடு சார்பில் நடராஜன், மொகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இமாசல் அணி தமிழ்நாட்டை விட 113 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh

SCROLL FOR NEXT