செய்திகள்

இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் - விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக இன்று வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #hijackcall #AirIndiahijacka #BCAS

மாலை மலர்

மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய (இயக்கங்கள்) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து இன்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.

விமான நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வரும் வாகனங்களை (கார்குண்டு தாக்குதல்களை தடுக்கும் வகையில்) தீவிரமான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

மேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.