செய்திகள்

அரசாணையை ஏற்று பத்திரப்பதிவு தடை உத்தரவை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ஏற்று, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் தளர்த்தி உள்ளது.

விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு புதிய விதிகளை வெளியிட்டு, அது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.