எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது, நீட் தேர்வு மதிப்பெண்களுடன் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் வாங்கும் மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் மட்டுமே நீட் தேர்வு நடத்துவது சரியானதா? என இந்திய மருத்துவ கவுன்சிருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
‘கிராம, நகரங்களில் கல்வித்தரம் வேறுபடும்போது சி.பி.எஸ்.இ. அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டது ஏன்? ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எப்படி மாணவர்களால் எதிர்கொள்ள முடியும்? பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு என்ன காரணம்? இது தொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் பதில் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.