சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.
அதில், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தத.
இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதுவும், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதியிட்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அப்போதைய உள்துறை முதன்மை செயலாளர் கையெழுத்து போட்டிருந்தது. அதில், ஆயுள் தண்டனை என்பது சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும். மேலும், இவர்கள் இருவரும் கொடூரமாக ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் தண்டனைப் பெற்றதால், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘கடந்த புதன்கிழமை தாக்கல் செய்த பதில் மனு கடந்த 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. தற்போதைய தமிழக அரசின் நிலைபாட்டின் அடிப்படையில், புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்’ என்றார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒரு வழக்கில் எத்தனை பதில் மனு தாக்கல் செய்வீர்கள்? கேள்வி எழுப்பினார்கள். பின்னர், விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.