செய்திகள்

ஐகோர்ட்டு தடை உத்தரவு எதிரொலி - சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

ஐகோர்ட்டு தடை உத்தரவு எதிரொலியாக ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. #BanOnBanners

மாலை மலர்

சென்னை:

சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பை நீதிபதிகள் அளித்து உத்தரவிட்டனர்.

சாலையோரம், இரு சக்கர வாகனம் செல்லும் வழிகள், பொதுமக்கள் நடக்கும் நடைபாதைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் பேனர்களை வைக்கக்கூடாது என்று கூறினர். மேலும் பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி தரக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டு உத்தரவையொட்டி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. 15 மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் எங்கெல்லாம் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததோ அவற்றை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், அடையார், கோயம்பேடு, வடபழனி, வியாசர்பாடி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பேனர்கள் அகற்றப்பட்டன.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பேனர்களை அகற்றி கொண்டு சென்றனர். இந்த பணிகள் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கட்சி பாகுபாடின்றி அனைத்து பேனர்களையும் அகற்றினால் மட்டுமே பிரச்சினை ஏற்படாது என்பதால் அதில் கவனமாக அதிகாரிகள் செயல்பட்டனர். #BanOnBanners