செய்திகள்

ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டம் ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராக்கெட் ராஜா மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #RocketRaja

மதுரை:

நெல்லையை சேர்ந்த ராக்கெட் ராஜா கடந்த மே மாதம் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராஜா என்ற ராக்கெட் ராஜா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், சென்னை தேனாம்பேட்டை போலீசார் கடந்த மே 9-ந்தேதி என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். என்னை சிறையில் அடைத்ததை எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர். இந்த நிலையில் ஜூன் 9-ந்தேதி என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்தனர். முறையான ஆவணங்கள் இன்றி விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்து நெல்லை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

குண்டாஸ் வழக்கு பதிவு தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது பதிவு செய்யப்பட்ட குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராக்கெட் ராஜா மீது பதிந்த குண்டாஸ் உத்தரவில் ஏற்பட்ட காலதாமதத்தை கருத்தில் கொண்டு குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். #RocketRaja