தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரியகோவில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தின் பெருமை மற்றும் கட்டிடக்கலை நுட்பம் ஆகியவற்றின் பெருமையை தாங்கியுள்ள இந்த கோவிலின் குட முழுக்கு வருகிற 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ் ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிப்ரவரி 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் செய்யும்போது குறித்த விவரங்கள் அடங்கிய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
தமிழ் ஆகம விதிப்படி தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் கூறினார்.