தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள மானியம் பெறும் வகையில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது ரூ.25,000 மானியம் இதில் எது குறைவோ, அத்தொகையை அரசு வழங்க உள்ளது.
முதற்கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜெயலலிதா பிறந்தநாளான 24-ம் தேதி மானியம் வழங்கப்பட உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து இலவசங்கள் வழங்குவதால் அரசின் நிதிநிலை மோசமடைவதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்கூட்டர் மானியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு என்றும் இதில் தலையிடக்கூடாது என்றும் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்கூட்டர் மானியத் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தனர்.