செய்திகள்

வலைத்தளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பை விமர்சித்த அரசு ஊழியர் கைது

சமூக வலைத்தளத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சமூக வலை தளங்களில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் பற்றியும் தரக்குறைவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஐகோர்ட்டு அவ்வப்போது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.

ஐகோர்ட்டு நீதிபதியான கிருபாகரன் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றியும் கருத்துக்களை கூறி இருந்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் பற்றியும் நீதிபதி கிருபாகரன் காரசாரமான கருத்துக்களை கூறி இருந்தார்.

இந்த நிலையில் பெருங்களத்தூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (60) என்பவர் அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பான பதிவுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் சுபாஷ்சந்திர போஸ் பதிவு செய்திருந்தார். இதுபற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இன்று காலை சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT