செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் படத்துடன் வெளியான நாணயங்களை திரும்ப பெறக்கோரும் வழக்கு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு

மதம் சார்ந்த உருவங்களுடன் நாணயங்கள் வெளியிடப்படுவதால் நாட்டின் மதசார்பின்மை பாதிக்கப்படாது என்று தங்கள் தீர்ப்பில் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

மதம் சார்ந்த உருவங்களுடன் வெளியிடப்பட்டு உள்ள நாணயங்களை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என டெல்லியை சேர்ந்த நபிஸ் காஸி, அபு சயீத் ஆகியோர் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக தஞ்சை பெரிய கோவில் (2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது) மற்றும் மாதா வைஷ்ணவி தேவி (2013) போன்ற உருவங்களுடன் வெளியான நாணயங்களை திரும்ப பெறுமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோரை கொண்ட அமர்வு, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மதம் சார்ந்த உருவங்களுடன் நாணயங்கள் வெளியிடப்படுவதால் நாட்டின் மதசார்பின்மை பாதிக்கப்படாது என்று தங்கள் தீர்ப்பில் கூறிய நீதிபதிகள், எந்தவொரு நிகழ்வையும் குறிக்கும் வகையில் நாணயங்களை வெளியிடுவதை மதசார்பின்மையும் தடுக்காது என்று தெரிவித்தனர்.

எந்த ஒரு நிகழ்வின் நினைவாகவும் நாணயம் வெளியிடும் அரசின் முடிவு முழுக்க முழுக்க நாணயவியல் சட்டத்தை சார்ந்தது என்றும் நீதிபதிகள் கூறினர்.  #tamilnews