சென்னை:
திருவள்ளூர் மாவட்டம், புண்ணியம் கிராமத்தை சேர்ந்த திலீப்குமார். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு குடிமைப் பொருள் வாணிபக் கழகம் மசூர் பருப்பு கொள்முதல் குறித்து கடந்த 24-ந் தேதி விளம்பரம் வெளியிட்டுள்ளது. 30 ஆயிரம் மெட்ரிக் டன் மசூர் பருப்பை குடிமைப்பொருள் வாணிபக் கழகத்துக்கு விநியோகிக்க ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு கரூர் மாவட்ட கலெக்டர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘பள்ளிக் குழந்தைகளுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் மசூர் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த பருப்பு, மனித ஆரோக்கியத்துக்கு தீங்கை உருவாக்கிறது. நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களை தருகிறது. அதனால், இந்த பருப்பை கொள்முதல் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, சமூக நலத்துறை 2007ம் ஆண்டு மார்ச் 1ந் தேதி, மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. ஆனால், தற்போது தமிழக அரசு மனித உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும், மசூர் பருப்பை மீண்டும் கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, 2017ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்டு வரை, துவரம் பருப்பு அல்லது மசூர் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தான் மசூர் பருப்பை கொள்முதல் செய்ய குடிமைபொருள் வாணிபக்கழகம் விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல லட்சம் குடும்ப அட்டைதாரர்கள், அரசு நியாயவிலை கடைகளில், அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குகின்றனர். தமிழக அரசு அந்த மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும். அதற்காக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இந்த பருப்பினால் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து வரும் என்பதை தெரிந்து இருந்தும், அதை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தடை விதிக்கவேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட விளம்பர அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘மசூர் பருப்பு வாங்குவது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பருப்பு ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காது’ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.