சென்னை:
உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறி மூட்டைகள் ஏற்றி சென்ற வேனில் இறந்த ஆணின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அதே வேனில் 2 முதியோர்களும் அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் உத்தரவுப்படி வருவாய்த் துறை சமூகநலத்துறை போலீசார் உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தனர்.
கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் முதியோர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வேறு இடங்களில் உள்ள அரசு உதவி வரும் காப்பகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
கருணை இல்லத்தை ஏன் மூடக்கூடாது என்று அதன் நிர்வாகிகளுக்கு ஆர்.டி.ஓ. நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து கருணை இல்ல நிர்வாகி தாமஸ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கருணை இல்லத்தை மூட தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘முறையாக அனுமதி பெற்று நடப்பதாக மனுதாரர் கூறும் நிலையில் இல்லத்தை ஏன் மூட வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். பின்னர் கருணை இல்லத்தை ஏன் மூடக்கூடாது என்று அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். #tamilnews