கன்னியாகுமரி:
குமரியில் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஒக்கி புயல் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனற எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் அதிக அளவாக 45 செ.மீ. மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 37 செ.மீ., கன்னியாகுமரி மயிலாடியில் 19 செ.மீ., தென்காசியில் 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, பேச்சிப்பாறை, பூதப்பாண்டியில் தலா 16 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரியில் புயலால் நடுக்கடலில் சிக்கிய 42 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். இதேபோல் கேரளாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக கடற்படை வீரர்கள் படகுகளில் சென்றுள்ளனர்.