செய்திகள்

தென்மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

குமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மாலை மலர்

வானிலை மாற்றம் காரணமாக அரபிக்கடல் பகுதியில் மினிக்காய் தீவுப்பகுதியில் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, பாபநாசம், செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. பருவமழை இல்லாத காலத்தில் கன மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மினிக்காய் தீவுக்கு தென்கிழக்கில் 50 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரத்தில் இருந்து தென்மேற்கு திசையில் 380 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இது குமரியில் இருந்து ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்று கூறலாம்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் தொடர்ந்து 16-ந் தேதி (நாளை) காலை வரை மணிக்கு 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதன் காரணமாக அந்த பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம். இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வலுவிழக்கும் நிலையில் உள்ளது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-