கோவை:
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் 100 டிகிரி வரை வெயில் அடித்து வந்தது.
நேற்று காலை முதல் கோவை மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் இதமான கால நிலை நிலவியது. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் நள்ளிரவு கனமழை பெய்தது. குறிப்பாக தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போளுவாம் பட்டி, நாதேகவுண்டன் புதூர், மத்வராயபுரம் பகுதிகளில் கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
நாதே கவுண்டன்புதூர், பட்டாளம்மன் வீதியில் 100 குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தததோடு சில வீடுகளின் சுவர்களும் சேதமடைந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
ஏற்கனவே ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட் டுள்ள தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று மாலை 4 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 2.30 மணிக்கு பலத்த மழை பெய்தது.