சென்னை:
தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது நேற்று காலை 8.30 மணிக்கு கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு வருகிறது. இதனால் அடுத்த 36 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 36 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சுமார் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என எச்சரிக்கை விடுத்துள்ளது.