தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.
இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.