செய்திகள்

முதுகுளத்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பேரூராட்சி அதிகாரி எச்சரிக்கை

முதுகுளத்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 15-ந்தேதி முதல் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே பேரூராட்சி துறையினர் அறிவிப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் பேரூராட்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, சுகாதார துறையினர் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கபடுகிறதா? என சோதனை செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் செயல் அலுவலர் உத்தரவின் பேரில் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் பஜாரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பைகள் வழங்கப்பட மாட்டாது துணிப்பை கொண்டு வரவும் என்ற அறிவிப்பை அனைத்து கடைகளில் உள்ள சுவர்களில் பேரூராட்சி ஊழியர்கள் ஓட்டினர்.

இதுகுறித்து செயல் அலுவலர் இளவரசி கூறியதாவது:-

வியாபாரிகள் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்ககூடாது, மீறினால் முதலில் 500 ரூபாயும், அதற்கடுத்து 5 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிப்பதுடன், கடை உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.